ஜி.எஸ்.பி பிளஸைப் பெற தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம்

0
Ivory Agency Sri Lanka

இலங்கை ஐரோப்பிய சந்தையில் எளிதில் நுழைவதற்கான வாய்ப்பை இழப்பதைத் தடுக்கும் திட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை புறக்கணிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தொழிற்சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சிறுபான்மையினரை அடக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தியது.

ஊடகங்களை அடக்குதல், சட்டத்தின் ஆட்சி இல்லாமை, காணாமல் போதல், கைதின் போதான கொலைகள், குழந்தைத் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் மற்றும் தொழிலாளர் உரிமைகளை பறித்தல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது உட்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், இலங்கையை ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான உதவிகளை இழக்கும் அபாயங்கள் ஏற்படுமென, ஐரோப்பிய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இரத்து செய்யப்படும் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்பாக கடந்த வாரம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இரத்து செய்யும் விடயத்தில் தலையீடு செய்வதை தொழிற்சங்க தலைவர்கள் தவிர்த்துள்ளனர்.

மனித உரிமைகள் மீறல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது ஆகிய விடயங்கள் குறித்து மாத்திரமே ஐரோப்பிய நாடாளுமன்றம் நிபந்தனைகளை வகுத்துள்ளதாக தொழில் அமைச்சர் கூறியபோது, அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இதுத் தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் பயன்படுத்துவதால் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தொழிலாளர் உரிமைகளை மீறுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்க நாட்டின் தொழிற்சங்கத் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் அரசாங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானம் தொழிற்சங்கத் தலைமையின் முறைப்பாடு எதுவும் இன்றி தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

சுதந்திர வர்த்தக வலயங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை மேலும் வலுப்படுத்தவும், முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தரநிலைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி தொழிலாளர் உறவுகளுக்கான நடத்தை விதிகளை தயாரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தீர்மானத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்து “எந்தவொரு பிரச்சினையும் எழுப்பப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ள தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா “தொழிலாளர் உரிமைகள் குறித்து எதுவும் பேசுவதற்கில்லை” எனவும் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மீள்பரிசீலனை செய்ய ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானித்துள்ள நேரத்தில், தொழிற்சங்கத் தலைவர்கள் அதன் பிரதிபலனின், நியாயமான பங்கை, ஏற்றுமதி துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பது எவ்வாறு என்பதை விவாதிப்பதே தொழிற்சங்க தலைவர்களின் நோக்கமாக அமைந்துள்ளது.

கடந்த வருடம் இலங்கை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ததில் பாதிக்கும் மேற்பட்டவை துணி மற்றும் தைத்த ஆடைகளாகும்.

இந்த கலந்துரையாடலுக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்கினார். தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ், இலங்கை வணிகக் கப்பல் சங்கத்தின் தலைவர் பாலித அதுகோரல மற்றும் பிற வர்த்தக தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தொழில் அமைச்சரின் கருத்துக்களுக்கு பதிலளித்த சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் அன்டன் மார்கஸ், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அமைப்புகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் முறைப்பாடு செய்துள்ள போதிலும், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய விடயங்கள் நிவாரணம் கிடைக்காமை குறித்து, தொழிற்சங்கங்கள எந்தவொரு முறைப்பாடும் செய்யாமையால், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தற்போதைய விவாதங்களில் அவை வலியுறுத்தப்படவில்லை.

அமைச்சர்கள் இவ்வாறு வாதிட்டால், நிலைமையை சரிசெய்ய விரைந்து தாம் அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் எச்சரித்தார்.

“இதற்கமைய, ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையுடன் தொடர்புடைடைய, இலங்கை அரசு கையெழுத்திட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) உடன்படிக்கையை,
நடைமுறையிலும் மற்றும் சட்டரீதியாகவும் நடைமுறைப்படுத்த தலையிடுமாறும், அதனை உறுதிப்படுத்துமாறும் நாங்கள் கேட்டுக்கொண்டோம்” என அன்டன் மார்கஸ் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று தொழிலாளர் தலைமை முன்மொழிந்துள்ளது.

“முதலாளிகள் அவற்றை ஏற்றுக்கொண்டு செயல்படவில்லை என்றால், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அதை இயக்குவதற்கும் உடனடியாக தலையிடுவதற்கான அதிகாரத்துடன் வெளிவிவகார அமைச்சு முத்தரப்பு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும்.
எங்கள் அனுபவம் என்னவென்றால், கடந்த முறை, 2017 இல், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை மீட்டெடுக்கப்பட்டபோது, இதேபோன்ற ஒரு குழு நியமிக்கப்பட்டு, தொழிலாளர் அமைச்சின் செயலாளர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அது ஒன்றும் செய்யாத செயலற்ற குழுவாக மாறியது. ஏனெனில் செயலாளராக அவர் அமைச்சின் பணிகளைப் பாதுகாக்க வேண்டும். ஜி.எஸ்.பி பிளஸ் ஊடான தொழிலாளர்களுக்கான பிரதிபலன் குறித்த பொறுப்பை அவர்களுக்கு வழங்காமல், ஜி.எஸ்.பி பிளஸுக்கு பொறுப்பான வெளிவிவகார அமைச்சிற்கு அதனை வழங்குமாறு நாம் கேட்கின்றோம்”

வெளிவிவகார அமைச்சர், தினேஷ் குணவர்தன இந்த விடயம் குறித்து பின்னர் விவாதிக்கப்படுமென, அறிவித்ததாக, தொழிற்சங்கத் தலைவர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

“வேலை முடிந்த பின்னர்”

வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கத்தில் தலைவர் லீனஸ் ஜயதிலக, “இது முடிவற்ற அநீதி” என சுட்டிக்காட்டுகிறார்.

2017இல் மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது இழந்த ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மீண்டும் பெறுவதற்கு, உதவிய தொழிற்சங்கங்களுக்கு, “வேலைக்குப் பின்னர்” கிடைக்காத சலுகைகளை, முதலாளிகள் தொடர்ந்து அனுபவித்து வருவதாக, சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காடுகின்றார்.

“இப்போது வரை, முதலாளிகள் மட்டுமே ஜி.எஸ்.பி பிளஸில் இலிருந்து பயனடைந்துள்ளனர். மறுபுறம், இந்த சலுகையின் காரணமாக, அந்நிய செலாவணி இருப்புக்கள் மேம்பட்டுள்ளதால் நாட்டின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பால் அரசாங்கங்கள் பயனடைந்துள்ளன.
அவ்வளவுதான். தொழிலாளர்களுக்கு எதுவுமில்லை. எனவே, தொழிற்சங்கங்கள் தொடர்ந்து தங்கள் நியாயமான பங்கைப் பெற விரும்பின. இது ஒரு அநீதி என்றும் அதை சரிசெய்ய வேண்டும் என்றும் அப்போதைய தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் ஒப்புக்கொண்டார். ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையின் 50% நன்மைகளை இந்த துறையில் உள்ள ஊழியர்கள் பெற வேண்டும் என அவர் கூறினார்.
உண்மையில், 2017 இல் நிவாரணத்திற்காக எழுந்து நின்ற தொழிலாளர் அமைப்புகளின் ஆதரவு இருந்தபோதிலும், வேலை முடிந்தபின் அரசாங்கமோ முதலாளிகளோ தொழிலாளர்களுக்காக எதுவும் செய்யவில்லை. இந்த சலுகையால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சமூக-பொருளாதார நிவாரணம் தொடர்பிலான இணக்கத்துடன் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது, ஆனால் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த சட்டத்தையும் கொண்டு வரவில்லை. சங்க சுதந்திரத்திற்கான எந்தவொரு உரிமையும் சட்டரீதியாக உத்தரவாதம் அளிக்கப்படவில்லை.” என லீனஸ் ஜயதிலக கூறியுள்ளார்.

கலந்துரையாடலின் போது, அமைச்சர் தினேஷ் குணவர்தன நிலைமையை ‘புரிந்து கொண்டதாக தெரிகிறது’ எனவும், “எதிர்காலத்தில் என்ன பதில் கிடைக்குமென பார்ப்போம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

”மொட்டை கருவிகள்”

பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரை மாத்திரமல்ல, உழைக்கும் மக்களையும் அடக்குவதற்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது போன்ற ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் திறன் ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரத்தின் பலவீனங்களால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் “முட்டாள் கருவிகளுடன்” பேரம் பேச வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

“ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கமே ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் இன்று தொழிலாளர் வர்க்கம் மிகவும் பலவீனமான அமைப்பு நிலையில் உள்ளது.
மொத்த தொழிலாளர் வர்க்கத்தில் 7% மாத்திரமே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நாம் பேசும் ஏற்றுமதி துறையில் உள்ள ஊழியர்களைப் பார்த்தால், 5% கூட ஒழுங்கமைக்கப்படவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் நாம் ஜி.எஸ்.பி பிளஸ் போன்ற கருவிகளைப் பயன்படுத்தலாமா என முயற்சிக்க வேண்டும். எங்களுக்கு வலிமை இருந்தால், தொழிலாளர் வர்க்க அமைப்பு ரீதியாக வலுவாக இருந்தால், நாம் அவர்கள் பின்னால் போகவேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்கள் சக்தியையும் பேரம் பேசுவதையும் காட்டுகிறார்கள். எனவே இந்த சூழ்நிலையில் இதுபோன்ற மொட்டை கருவிகளைப் பயன்படுத்த முடியுமா மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த முடியுமா என்பதை நாம் பார்க்க வேண்டும், ”என அன்டன் மார்கஸ் கூறியுள்ளார்.

இணக்கம் தெரிவிக்கப்பட்ட மனித உரிமைக் கடமைகளை இலங்கை நிறைவேற்றவில்லை என்பதை நிரூபித்தால், தற்போதுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம் காணப்படுகின்றது.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை தொடர்ந்து வழங்குவது குறித்த தீர்மானத்துடன் இணைந்ததாக, ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருடம் நவம்பரில் இலங்கையின் மனித உரிமை நிலைமையை மதிப்பாய்வு செய்யும். சிறுபான்மையினர் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைக் கடமைகளைச் செயல்படுத்துவதையும் இது உள்ளடக்கியுள்ளது.

மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டின் மஹிந்த ராஜபக்வ நிர்வாகத்தால் செயல்படுத்தப்படாததால் பெப்ரவரி 2010 இல் முன்னுரிமை வரி சலுகையான (ஜிஎஸ்பி பிளஸ்) இடைநிறுத்தப்பட்டது, நல்லாட்சி அரசாங்கம், மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளை செயற்படுத்துவது குறித்த உத்தரவாத்திற்கு அமைய, நம்பிக்கையின் அடிப்படையில், 2017 மே மாதம் ஜிஎஸ்பி பிளஸ் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது.

சீனாவுக்கு அடுத்ததாக ஐரோப்பா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும்.

ஐரோப்பா கடந்த வருடம் இலங்கையிலிருந்து 21 கோடி யூரோ பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments