திரவ இயற்கை எரிவாயு மின்சாரத்தை கொள்வனவு செய்ய அனுமதி

0
Ivory Agency Sri Lanka

நாட்டின் முதல் திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் நிலையத்திலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

300 மெகாவொட் திரவ இயற்கை எரிவாயு மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக, 300 மெகாவொட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான, ஒப்பந்தத்திற்கு, கடந்த 13ஆம் திகதி கூடிய, இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மின்சார ஒப்பந்தம், இலங்கை மின்சார சபை மற்றும் லக்தனவி நிறுவனத்திற்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கெரவலபிட்டி மின் நிலையத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் மின்சார ஒப்பந்தம் நுகர்வோர், இலங்கை மின்சார சபை மற்றும் அரசுக்கு மிகவும் சாதகமான நிபந்தனைகளுடன் செயற்படுத்தப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முந்தைய மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாத 18 சாதகமான விதிமுறைகளை இணைக்க, இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதோடு, இலங்கை மின்சார சபை மற்றும் லக்தனவி ஆகியன அந்த சாதகமான விதிமுறைகளைச் இணைக்க இணக்கம் வெளியிட்டுள்ளன.

“இதற்கமைய இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 300 மெகாவொட் மின் உற்பத்தி ஒப்பந்தம் நுகர்வோர், அரசு மற்றும் இலங்கை மின்சார சபைக்கு அதிக நன்மை பயக்கும்.”

இந்த ஒப்பந்தத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த மின் நிலையத்தால் வழங்கப்படும் ஒரு அலகு மின்சாரத்தின் விலை 4.98 ரூபாயாகும்.

இயற்கை எரிவாயு வழங்கலை ஆரம்பிக்கும் வரையில் டீசலை பயன்படுத்தி ஆரம்பகட்ட மின்னுற்பத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

நாட்டின் முதல் எல்.என்.ஜி மின்நிலையத்திற்கு விலைமனுக் கோரலை மேற்கொள்ள 2016 நவம்பர் 15ஆம் திகதி இலங்கை மின்சார சபை, ஆணைக்குழுவின் ஒப்புதலைக் கோரியிருந்தது.

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு, இரண்டு நாட்களுக்குள் அதாவது 2016ஆம் ஆண்டு நவம்பர் 17, அனுமதி அளித்தது.

விலைமனுக் போரல் மூலம் இந்த மின் நிலையத்தை உருவாக்க பொருத்தமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பு இலங்கை மின்சார சபைக்கு ஒப்படைக்கப்பட்டதோடு, இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கான விலைமனுக் கோரல் செயற்பாட்டை நிறைவு செய்ய சுமார் நான்கு வருடங்கள் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விலைமனுக் கோரல் செயற்பாடு நிறைவடைந்த பின்னர், தகுதியான தரப்பினரைத் தேர்ந்தெடுத்ததும், தொடர்புடைய கொள்முதல் ஒப்பந்தத்தை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு 2020 ஒக்டோபர் 9ஆம் திகதி அங்கீகரித்தது.

முன்வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கும், விலைமனுக் கோரல் நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதை, ஆணைக்குழுவின் மீளாய்வு அறிக்கையில், வெளிப்படுத்தியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

“குறிப்பாக, அசல் ஒப்பந்தத்தில் உள்ள 18 சாதகமான விதிமுறைகள் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. அந்த நிபந்தனைகளை நீக்குவதால், நுகர்வோர், அரசு மற்றும் இலங்கை மின்சார சபைக்கு தீங்கு ஏற்படும் என்பதால் இந்த விதிமுறைகளை மீண்டும் இணைக்குமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டு இறுதி ஒப்பந்தத்திற்கான அனுமதி நவம்பர் 25, 2020 அன்று வழங்கப்பட்டது. ”

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கிய இலங்கை மின்சார சபை இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தை அனுமதிக்காக கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி ஒப்படைத்தது.

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கடந்த 15ஆம் திகதி வெளியிட்ட ஊடக அறிக்கையில், 2020 டிசம்பர் மாத ஆரம்பத்தில், அப்போதைய ஆணைக்குழு உறுப்பினர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியதாகக் தெரிவித்துள்ளது.

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் 2021 பெப்ரவரி முதல் வாரத்தில் நியமிக்கப்பட்டனர்.

புதிய உறுப்பினர்களின் முதல் கூட்டத்தில் 300 மெகாவொட் இயற்கை மின் உற்பத்தி ஒப்பந்தத்திற்கான இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த 300 மெகாவொட் எல்.என்.ஜி மின் உற்பத்தி நிலை நிர்மாண நடவடிக்கைகளை விரைந்து பூர்த்தி செய்ய, மின்சார சபை நடவடிக்கை எடுக்குமென இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Facebook Comments