ஆண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக தென்னிலங்கை பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு

0
Ivory Agency Sri Lanka

வடக்கு மற்றும் கிழக்கில் அரச பாதுகாப்புப் படையினரால் ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக, தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்படுகின்ற நிலையில், சித்திரவதை செய்யப்பட்டமைத் தொடர்பில் தென்னிலங்கையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த அதிகாரி தமது வாடிக்கையாளரின் உயிரை மாய்த்துவிடுவாரோ என்ற அச்சத்தில் நாட்டின் உயர்மட்ட சட்ட நிறுவனம் ஒன்று குறித்த முறைப்பாட்டை செய்துள்ளது.

சப்ரகமுவ முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உட்பட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று, ஒருவரை பலவந்தமாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நிர்வாணமாக்கி, மயக்கம் வரும்வரை தாக்கி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பின்னர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு (கற்பழிப்பு) உட்டுபடுத்துவதாக அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கிரியெல்ல வீதியில் வாகனத்தில் பயணித்த ஒருவரை அதிகாரி தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனம் ஜனாதிபதியிடம் செய்த ஏழு பக்க முறைப்பாட்டின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர் ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த மிஷார ரணசிங்க என குறிப்பிடப்பட்டுள்ளது.

வீதியில் சென்றவரை பொலிஸ் நிலையத்திற்கு பலவந்தமாக அழைத்துச் சென்ற செயற்பாட்டில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உதவியாக செயற்பட்ட, கிரியெல்ல பொலிஸ் நிலையத்தின் (15706) ஆர்.ஏ.ஜே பண்டார உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் இந்த சித்திரவதைக்கு உடந்தையாக இருந்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில், மிஷார ரணசிங்க உத்தியோகபூர்வ பொலிஸ் காவலில் வைக்கப்படாமல், பொறுப்பதிகாரியின் அறைக்கு அருகில் உள்ள அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, இருளில் வைக்கப்பட்டுள்ளார்.

”இதன்போது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிரியெல்ல பொலிஸ் நிலையத்தில் இருந்ததை குறிப்பிடுமாறு எமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சித்திரவதை, பயம் மற்றும் வெறுப்பு ஆகிய விடயங்கள் விபரிக்கப்பட்டுள்ளன.

a) எங்கள் வாடிக்கையாளரின் கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.

b) எங்கள் வாடிக்கையாளர் நிர்வாணமாக்கப்பட்டு மண்டியிட வைக்கப்பட்டார்.

c) WP KX – 1486 என்ற எண்ணைக் கொண்ட வாகனத்தில் இருந்த இரண்டு அதிகாரிகள் முன்னிலையில், சீருடை கலட்டிய, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எங்கள் வாடிக்கையாளரைத் தாக்கியுள்ளார்.

d) எங்கள் வாடிக்கையாளரை வலுக்கட்டாயமாக முழந்தாலிடச் செய்து, அவரது கழுத்து, தலை, வயிறு மற்றும் பிறப்புறுப்பினை தாக்கியுள்ளதோடு, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் எங்கள் வாடிக்கையாளர் சுயநினைவை இழக்கும் வரை காலால் மிதித்துள்ளார்.

e) எமது வாடிக்கையாளர் நிர்வாணமாக இருக்கும் போது, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், தன்னுடைய கைத்தொலைபேசியில் அவரை புகைப்படமெடுத்துள்ளதோடு, அவரது பிறப்புறுப்புகளை இழுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

f) மதுபானம் மணம் வீசிய நிலையில் இருந்த, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எங்கள் வாடிக்கையாளரின் உடலை அழுத்திக் கொண்டு, “உன் பி* புறத்தை திறக்கிறேன்” என அச்சுறுத்தியதோடு, பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக அச்சுறுத்தியுள்ளார். விடுத்துள்ளார்.

g) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மன்னிப்புக் கோருமாறு, உதவி பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளதோடு, அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் எமது வாடிக்கையாளரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.

h) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், தன்னிடம் இருக்கும் எங்கள் வாடிக்கையாளரின் நிர்வாண புகைப்படங்களை பகிரங்கமாக பகிர்ந்து மற்றும் விளம்பரப்படுத்துவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளரை அவமானப்படுத்துவதாக அச்சுறுத்தியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரி தமது வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை வெளிவருவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இது தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என வாடிக்கையாளரான மிஷார ரணசிங்க அஞ்சுவதாகவும் நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

போருக்குப் பின்னர் இலங்கை பாதுகாப்புப் படையினராலும் பொலிஸாராலும் தமிழ் ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் பல வருடங்களாக முன்வைத்த குற்றச்சாட்டுகளை முன்னைய அனைத்து அரசாங்கங்களும் மறுத்துள்ளன.

மனித உரிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டம் (ITJP) கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கை பாதுகாப்புப் படையினரால் சித்திரவதைக்கு உள்ளாகி நாட்டை விட்டு வெளியேறிய 15 தமிழ் இளைஞர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது.

இலங்கை பாதுகாப்புப் படையினரால் நடத்தப்படும் தடுப்பு முகாம்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 121 தமிழ் ஆண்கள் வழங்கிய தகவல்கள் மூன்று வருடங்களுக்கு முன்னர் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரசாங்கமோ அல்லது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவோ (HRCSL) பொறுப்பான அதிகாரிகளின் பெயர்கள் உட்பட கூறப்படும் பாலியல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய இதுவரை முன்வரவில்லை மற்றும் நாட்டின் முக்கிய தமிழ் அல்லாத ஊடகங்கள் இதுத் தொடர்பில் அறிக்கையிட்டதையும் காணக்கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களால் மிஷார ரணசிங்க சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Facebook Comments