சரியாக இயங்காத இரண்டு ஜனாதிபதிகளால் கட்டப்பட்ட சிறுநீரக வைத்தியசாலை

0
Ivory Agency Sri Lanka

பொலன்னறுவையில் 12 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை நோயாளர்களுக்கு உகந்த சேவையை வழங்கத் தவறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

பொலன்னறுவையில் 12 பில்லியன் ரூபா செலவில் 30 மாத காலப்பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூன் 11ஆம் திகதி திறந்து வைத்தார்.

இந்த வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களிப்புக்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனால் பெர்னாண்டோ தனது கௌரவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பொலன்னறுவை தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை திறக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள போதிலும் பின்வரும் காரணங்களால் சிறுநீரக நோயாளர்களுக்கு உகந்த சேவையை வழங்க முடியவில்லை.

“1. பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 201 படுக்கைகள் இருந்தாலும், விசேட வைத்தியர்கள் உட்பட போதுமான சுகாதார ஊழியர்கள் இல்லாததால், 25 வீதமான படுக்கைகள் மாத்திரமே தற்போது பயன்படுத்தப்படுகின்றன. சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மற்றும் கதிரியக்க சிறப்பு நிபுணர்கள் உட்பட 10 சிறுநீரக சிகிச்சை நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், தற்போது இரண்டு நிபுணர்கள் மாத்திரமே வைத்தியசாலையில் பணியாற்றுகின்றனர்.

2. வைத்தியசாலையில் 100 ஹீமோடையாலிசிஸ் (Hemodialysis) இயந்திரங்களை இயக்குவதற்கு தேவையான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அவசியமாகின்ற போதிலும், தற்போது 30 இரத்த மாற்று இயந்திரங்கள் மாத்திரமே இயங்குகின்றன.

3. தேசிய சிறுநீரக வைத்தியசாலையை நிர்வகிப்பதற்கு, பணிப்பாளர் உட்பட தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை வைத்தியசாலைக்கு பணிப்பாளர் ஒருவரை நியமிக்கவில்லை.

4.சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை உள்ளிட்ட சிறுநீர்க்குழாய் சத்திர சிகிச்சைக்கு தேவையான நவீன கருவிகள் பொருத்தப்பட்ட 6 சத்திர சிகிச்சை அறைகள் இருந்தும் இதுவரை ஒன்று கூட செயற்படாமை வருத்தமளிக்கிறது. இந்த நவீன ஆய்வுக்கூடம் மற்றும் இயந்திரங்களின் உத்தரவாதக் காலம் பயன்பாடின்றி காலாவதியாகவிருப்பதால், உத்தரவாதக் காலம் முடிந்து இயந்திரங்கள் இயங்கத் தொடங்கும் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால், இயந்திரங்களை சரி செய்ய பெரும் செலவாகும்.

5. ஆய்வகங்கள், எக்ஸ்ரே மற்றும் எலக்ட்ரோ என்செபலோகிராபி (ECG) உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வைத்தியசாலையில் இருந்தாலும், பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகளை பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் மூலம் ஏற்றிச் செல்ல வேண்டியுள்ளது. காலதாமதமும் ஒரு தீவிர பிரச்சினையாகும்.

மிகப்பெரிய நிதி செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு சுகாதார அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை வெளியிட்டு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோவின் கையொப்பத்துடன் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

Facebook Comments