“தேசிய சிறுநீரக வைத்தியசாலையை இன்று, ஒரு வெள்ளை யானை” முன்னாள் ஜனாதிபதி

0
Ivory Agency Sri Lanka

பொலன்னறுவையில் 100 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை நோயாளர்களுக்கு உகந்த சேவையை வழங்கத் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

”இந்த வைத்தியசாலையின் பெறுமதி இன்று மக்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த வைத்தியசாலை வெள்ளை யானையாக இருப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை என்ற பேச்சு அடிபடுகின்றது. அது உண்மை. இன்று இந்த வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கக்கூடிய 100 இரத்த சுத்திகரிப்பு கருவிகள் உள்ளன. இன்று 22 நோயாளிகளுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றது.”

வார இறுதியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் சிறுநீரக நோயாளர்களுக்கான வைத்தியசாலையின் தற்போதைய நிலை குறித்து முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் தற்போதைய சுகாதார அமைச்சர் ஆகியோரிடம் கலந்துரையாடினாலும் பலனில்லை என முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“நான் எனது நிலையிலிருந்து இறங்கி இந்த வைத்தியசாலை சார்பாக அனைவரிடமும் பேசினேன். ஆனால் இன்று இந்த வைத்தியசாலை சரியாக இயங்கவில்லை. உயர்தொழில்நுட்ப உபகரணங்கள் அழிந்து வருகின்றன. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் பேசினேன். பவித்ராவிடம் பேசினேன். அது எதுவும் பலனளிக்கவில்லை. வைத்தியசாலை செயலிழந்து வருகிறது.”

வைத்தியசாலையின் உயர் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு நேர்ந்த கதி குறித்தும் முன்னாள் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

“இன்னும் சில நாட்களில் உயர்தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படாமல் அழிந்துவிடும். முழு இலங்கையிலும் சிறுநீரக நோயாளர்களுக்கான ஒரேயொரு வைத்தியசாலை இதுவாகும். நோயாளிகள் வெகு தொலைவில் இருந்து வருகிறார்கள்.
அவர்களுக்கு சேவையை வழங்குங்கள். seeti இயந்திரம் இன்று சரியாக இயங்கவில்லை, நான் சத்தமிட்டு அதனை சரி செய்தேன். அது இருபத்தி இரண்டு கோடி பெறுமதியானது. வீணாக சிதைகிறது.”

குறித்த வைத்தியசாலைக்கு பணிப்பாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொலன்னறுவையில் 12 பில்லியன் ரூபா செலவில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் 30 மாத காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட, தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையை 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி திறந்து வைத்தார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

எல்லாத்துக்கும் ”யெஸ் சர்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய மூன்று மக்கள் பிரதிநிதிகளும் மக்கள் பிரச்சினைகளை பேசுவதில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

“விவசாயிகள் பிரச்சினையை நான் எங்கெல்லாம் பேச முடியுமோ அப்போதெல்லாம் பேசுவேன். என்னைத் தவிர பொலன்னறுவையில் இருந்து நாடாளுமன்றம் சென்ற மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் யாரும் விவசாயிகள் பிரச்சினைத் தொடர்பில் பேசுவதில்லை. அனைத்திற்கும் ”யெஸ் சேர்” என காலத்தை வீணடிக்கின்றனர். நாடு இன்று சோகத்தில் உள்ளது. எங்கும் ஒரு மனக்குறை உள்ளது. மக்கள் வாழ்க்கை சீரழிந்துள்ளது. வறுமை தலைவிரித்தாடுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை சீரழிந்துள்ளது.” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments