அரச படையினரிடம் கையளிக்கப்பட்டு அவர்களால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் உகண்டாவில் ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமானது என நம்பப்படும் தொழிற்சாலைகளில் அடிமை பணியை செய்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
“ராஜபக்ச குடும்பத்துக்குச் சொந்தமான உகாண்டாவில் உள்ள 11 தொழிற்சாலைகளில் எங்கள் பிள்ளைகள் ஊதியம் இன்றி தொழிலாளர்களாகப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.
கையளித்து காணாமல் போன எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என சொல்ல முடியாதவர்கள் எமது பிள்ளைகளை கூலித்தொழிலாளிகளாக்கி வைத்திருக்கலாம். அந்த தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் வேலுப்பிள்ளை கணநாதன் என்ற தமிழர் இருக்கிறார்,” என வடக்கு கிழக்கு மாகாண பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் யோகராசா கலைரஞ்சனி தெரிவிக்கின்றார்.
இந்த வருட ஆரம்பத்தில், மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு திருப்பதிக்கு புனித யாத்திரை செல்வதற்காக உகண்டாவில் உள்ள கோடீஸ்வர தொழிலதிபரும், கென்னியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான வேலுபிள்ளை கணநாதன் தனியார் ஜெட் விமானத்தை வழங்கியதாக நம்பப்படுகிறது.
கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட கலைரஞ்சனி, வெளிநாடுகளில் வாழும் தமிழ் சமூகம் ஒன்று திரண்டு தமது பிள்ளைகள் உகாண்டாவில் இருக்கிறார்களா என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொள்வதற்கு ஆதரவு வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.
`நிச்சயமாக எங்கள் பிள்ளைகள் கொல்லப்படவில்லை. அவர்கள் அனைவரும் இந்த ராஜபக்ச குடும்பத்தின் அடிமைகளாக வாழ்கிறார்களா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. 13 ஆண்டுகளாக எங்கள் உறவினரை தேடி வருகிறோம். எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசாங்கம் சொல்லும் என நான் நம்பவில்லை. இந்த ஆட்சி மாற்றம் எங்களுக்கு பெரிதாக ஒன்றும் செய்யாது.“
இலங்கையை அவதானித்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வையும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியையும் பெற்றுத்தருமாறு அவர் சர்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக்கான போராட்டத்திலும் அரசியல் தீர்வுக்கான போராட்டத்திலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தேவையான ஆதரவையும் தலைமையையும் வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
“நாட்டில் இருந்து துரத்தப்பட்ட ராஜபக்ச குடும்பம் அனாதைகளாக வீதியில் அலையும் இந்த தருணத்தில் கொலையாளியை கைது செய்ய சர்வதேச சமூகம் முன்வர வேண்டும். கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்பட்டு நீதி கிடைக்கும் என நாம் நம்புகிறோம்.”
சிங்கப்பூரில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய வலியுறுத்தி மலேசியா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது.