திலீபனை கொண்டாடியமைால் இராணுவத்தை சாடும் வீரவன்ச

0
Ivory Agency Sri Lanka

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திலீபனை பகிரங்கமாகக் கொண்டாடிய அனைவரையும் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என அண்மையில் அரசாங்கத்தில் இருந்து பிரிந்த சிங்கள தேசியவாதக் குழுவின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 12 நாட்கள் திலீபனை பகிரங்கமாக கொண்டாடுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட உத்தர லங்கா கூட்டமைப்பு என்ற ராஜபக்ச ஆதரவு அமைப்பின் தலைவரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால், அதன் தலைவர்களைக் கொண்டாடுவதும், அதற்காக வாகன அணிவகுப்பு நடத்துவதும் சிங்கள மக்களைக் கோபமடையச் செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்களாலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் சமூக ஊடகங்களிலும் திலீபன் கொண்டாடப்பட்டுள்ளார். இதுத் தொடர்பில் விசாரணை நடத்தி அதனுடன் தொடர்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.”

திலீபன் கொண்டாட்டங்கள் பகிரங்கமாக நடத்தப்படும் போது இராணுவப் பொலிஸார் ஏன் மௌமான இருந்தனர் என உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். குடாநாட்டை இந்திய அமைதிப்படை ஆக்கிரமித்திருந்த நிலையில், 987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, திலீபன் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து முப்பத்தைந்து வருடங்களாகின்றன.

“மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும். அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும். என்ற ஐந்து கோரிக்கைளை முன்வைத்து திலீபன் யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அருகில் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாணத் தலைவராக இருந்த திலீபன் 12 நாட்களுக்குப் பின்னர் செப்டெம்பர் 26ஆம் திகதி உயிரிழந்தார். யாழ்ப்பாணக் குடாநாடு இந்திய அமைதிப்படை மற்றும் இலங்கை அரசுப் படைகளால் சூழப்பட்டிருந்தது. உண்ணாவிரதத்தை நிறுத்த இந்தியா கடுமையாக முயற்சித்தாலும், திலீபன் தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிட சம்மதிக்கவில்லை.

அரச படையினரால் பல தடவைகள் தகர்க்கப்பட்ட நல்லூரில் உள்ள திலீபன் நினைவுத் தூபிக்கு அருகாமையில் கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி மாவீரரின் பெற்றோர்களின் பங்களிப்புடன் நினைவு நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நினைவுத்தூபிக்கு முன்பாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இம்முறை முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்களும் கலந்துகொண்டதாக உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சுற்றி வாகனப் பேரணி ஒன்றையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

பிரதமரின் விருப்பம்

திலீபன் நினைவேந்தல் ஆரம்பமாகியிருந்த நிலையில், யுத்தத்தின் போது உயிரிழந்த எந்தவொரு நபரையும் அவர்களது உறவினர்கள் மற்றும் அந்த இனத்தவர்களுக்கு நினைவு கூறுவதில் எவ்வித தடையும் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் அரசியல் ரீதியாகவும், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள் மற்றும் சின்னங்களை பயன்படுத்தியும், இன வேறுபாடுகளை தூண்டி ஒரு சார்புடையதாகவும் இருக்கக் கூடாது எனக் கூறிய பிரதமர், அவ்வாறு மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த சில ஆண்டுகளாக, தமிழர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்ற போதிலும், அரசு பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியே வருகின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 35ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் பொத்துவிலில் இருந்து நல்லூருக்கு சென்ற வாகன ஊர்வலத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாக அப்பகுதி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகனத் தொடரணியை இடைமறித்த பொலிஸார், திலீபனின் உருவம் பொறிக்கப்பட்ட வாகனங்களில் பயணித்த அனைவரின் பெயர்களையும் ஊர்களையும் பதிவு செய்துள்ளனர்.

திலீபன் நினைவுகூறுவோரை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கோரும் விமல் வீரவன்ச, வடக்கில் இந்திய அமைதி காக்கும் படையினர் வடக்கை ஆக்கிரமித்திருந்த போது அதற்கு எதிராக ஆயுதம் ஏந்திய மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் பிரிவின் வீரராவார்.

பின்னர், அந்த முன்னணியில் இருந்து பிரிந்து ராஜபக்ச ஆதரவாளராக ஆட்சிக்கு வந்த வீரவன்ச, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து சில நாட்களில் அதனை கைவிட்டார்.

Facebook Comments