தென்னிலங்கை போராட்டக்காரர்களுக்கு தமிழ் தாய்மார்களிடமிருந்து ஒரு செய்தி

0
Ivory Agency Sri Lanka

அரச படைகளினால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரி இடைவிடாத போராட்டத்தை முன்னெடுத்து வரும் வடக்கு கிழக்கில் தமிழ் தாய்மார்கள் புத்தாண்டிலும் தமது பிரச்சாரத்தை கைவிடவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டத்தின் 1881ஆவது நாளான புத்தாண்டு தினத்தன்று, வவுனியாவில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், இத்தருணத்தில் தமிழ் மக்கள் நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனின், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கள இளைஞர்களின் போராட்டங்களில் தமிழ் இளைஞர்கள் கலந்து கொண்டாலும் ஒற்றையாட்சியை மேலும் பலப்படுத்தும் வரையில் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என அரச படையினரால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

“கொழும்பில் சிங்கள இளைஞர்களின் போராட்டங்களில் தமிழ் இளைஞர்களும் இணைந்து கொள்வதால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இது ஒற்றையாட்சியை பலப்படுத்தும்” என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் எம்.ஆர்.ஜே.குமார் தெரிவித்துள்ளார்.

“கொழும்பில் உள்ள சிங்கள, தமிழ் மக்கள் ஒற்றுமையாக உள்ளனர், எனவே இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்களில் இருந்து விடுபடவே இதனை மேற்கொள்கின்றார்கள்.”

நிதி நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“இலங்கையின் எதிர்காலத்தை சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும். இலங்கையின் எதிர்காலம் அவர்களின் கைகளில் உள்ளது. தமிழ் மக்களுக்கான சுதந்திர நிர்வாக அலகுக்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடுகளுடனும் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.”

Facebook Comments