அமைச்சர்களுக்கு வீடுகளை அமைக்கும் அரசு, 8 இலட்சம் இலங்கையர்களுக்கு தங்குமிடம் இல்லை

0
Ivory Agency Sri Lanka

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்காக வீட்டு வளாகங்கள் அமைக்கப்படுகின்ற நிலையில், சுமார் எட்டு இலட்சம் இலங்கையருக்கு வசிக்க வாழ்விடங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆறு மில்லியன் குடும்பங்கள் வசிக்கும் இலங்கையில் 5.2 மில்லியன் குடும்பங்கள் மாத்திரமே ஏதேனும் ஒரு வகையான வீடுகளை வைத்திருப்பதாகவும், சுமார் எட்டு இலட்சம் குடும்பங்கள் கடுமையான வறுமையில் வாழ்வதோடு, வீடு என அழைக்கக்கூடிய பாதுகாப்பான இடமின்றி வாழ்வதாக, மனித நேயத்திற்கான வழ்விடம் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் யூ ஹ்வா லீ தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது அரசின் பொறுப்பு என்றாலும், முன்னைய அரசாங்கங்களுக்கு பதில் சொல்லும் எண்ணம் இல்லை, நீர்கொழும்பில் இடம்பெற்ற, இணையத்தளம் ஊடான உலக வாழ்விட தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யூ ஹ்வா லீ, வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்கு பின்னரும், ஸ்ரீலங்கா இன்னும் வளர்ந்து வரும் நாடாக காணப்படுவதாகவும், குறைந்தபட்சம் எந்த அரசாங்கத்தாலும், இந்த நாட்டின் வீட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில், மாதிவெலவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 200 வீடுகளை அமைக்க முன்வந்துள்ள நிலையில், யூ ஹ்வா லீ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 4ஆம் திகதி உலக வாழ்விட தினத்தையொட்டி, நீர்கொழும்பு மக்கள் ஐக்கிய அமைப்பு, கம்பஹாவில் வீடற்ற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒரு கடிதத்தை கையளித்துள்ளது.

“ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வசதியான வீட்டை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் சௌபாக்கிய நோக்கு கொள்கையின் ஒரு விசேட அம்சமாகும். எங்கள் பிரச்சினையை நீங்கள் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும் நாம் நம்புகின்றோம்,” என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. “நிரந்தர வீடு இல்லாத நாங்கள், சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளோம். எங்கள் பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் போது எங்களுக்கு நிரந்தர முகவரி இல்லாததால் எங்கள் விண்ணப்பங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன. நிரந்தர முகவரி இல்லாததால் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அரச வழங்கும் மானியங்களை இழக்கின்றோம்”

இந்த வீட்டு பிரச்சினை 1979 முதல் 40 வருடங்களாக நீடிப்பதாக நீர்கொழும்பு மக்கள் ஐக்கிய அமைப்பின் செயற்பாட்டாளரான சுபத்திரா குமாரி குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் அனைவரும் குறைந்த வருமானம் உள்ளவர்கள். எனவே, பொருளாதார நெருக்கடி உள்ளது. நாங்கள் வாடகை செலுத்த முடியாததால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பல குடும்பங்களுடன் வாழ்வது ஒருவருக்கொருவர் தனியுரிமையை பாதிக்கிறது”

”3 அல்லது 4 குடும்பங்கள், அதாவது, 10-15 பேர் ஒரே வீட்டில் வசிக்கும் போது, பல மன வேதனைகள், சண்டைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை இழப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வட மாகாணத்தில் போருக்குப் பின்னர் வீடற்ற நிலையில் பலர் வாழ்ந்து வருவதாக கிராமிய தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

”7,000ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அகதி முகாம்களிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ அல்லது வாடகை வீடுகளிலோ குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வாழ்கின்றனர். அவர்களில் சுமார் 800 பேர் இன்னும் அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.
மயிலிட்டி, காங்கேசன்துறை துறைமுகங்கள் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி அறிவித்து, தமிழ் மக்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் விடுவிக்கப்படவில்லை, அவை இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன ”என கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ. . இம்பநாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Facebook Comments