தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேற்குலகப் பயணம் தொடர்பில் தமிழர்களுக்கு சந்தேகம்

0
Ivory Agency Sri Lanka

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கான விஜயம் ராஜபக்ச அரசுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வார இறுதியில் கொழும்பில் இருந்து அமெரிக்கா சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட உயர்மட்ட சட்டத்தரணிகள் குழு பின்னர் கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு செல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இங்கிலாந்தில் சந்திக்க உள்ளார்.

அமெரிக்க வெளிவிவகார செயலகத்தின் அழைப்பின் பேரில் வொஷிங்டன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனக ஈஸ்வரன் மற்றும் சட்டத்தரணி டாக்டர் நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரைக் கொண்டுள்ளது.

“சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து இலங்கை அரசைக் காப்பாற்ற” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் வெளிநாட்டு அரச தலைவர்களைச் சந்திக்கப் போவதாக 1730 நாட்களாகப் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி வவுனியா சத்தியாக்கிரக மைதானத்தில் 15 வருடங்களுக்கு முன்னர் வீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நடராஜா ரவிராஜின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

அமெரிக்கா சென்று தமிழ் மக்களை அவமானப்படுத்த வேண்டாம் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ராஜ்குமார் சுமந்திரன் உள்ளிட்டவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க தலையீடு

அரசாங்கம் கொண்டுவர திட்டமிட்டுள்ள புதிய அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே தமது நோக்கமென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்த ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக நிபுணர்கள் குழுவொன்றை வொஷிங்டனுக்கு அனுப்புவதாக தெரிவித்திருந்தனர். இதற்கமைய இந்த பயண ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஸ்தாபகப் பங்காளியாக அமெரிக்கா தனது அபிலாஷைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை ஒப்புக்கொண்டுள்ளது.

ராஜபக்ச அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பை கருத்திற் கொண்டு அதிகாரப் பகிர்வுக்கான சமஷ்டி தீர்வு தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வார இறுதி ஆங்கில பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்.

“எங்கள் அரசியல் அபிலாஷைகள் என்ன என்பதையும், அமெரிக்காவைப் போன்று ஏனைய நாடுகளில் உள்ள கூட்டாட்சி கட்டமைப்புகளை ஆராய்வதன் ஊடாகவும் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்க்க காணலாம் என்பதை விளக்குவோம்” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு வரைபு இந்த வருட இறுதிக்குள் தயாராகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரி தமிழ்க் கட்சிகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் தலைமைத்துவ மட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினரின் அமெரிக்க விஜயம் அமைந்துள்ளது.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகள் பிரசன்னமாகியிருந்த போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலமான கட்சியான தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை.

மேலும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பன இதற்கு பங்களிப்பு வழங்கவில்லை.

சம்பந்தன், சுமந்திரன் மற்றும் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரை நவம்பர் 11ஆம் திகதி சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, தமிழ்-முஸ்லிம் கட்சித் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு பங்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசனும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் எதிர்காலத்தில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை தம்முடன் இணைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஒற்றையாட்சியின் கீழ் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வடக்கு, கிழக்கை இணைத்து சமஷ்டி முறைமையை ஏற்றுக்கொள்வதே தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வாகும் என அமெரிக்கா செல்லும் குழு வலியுறுத்த வேண்டுமென, முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தம் ஒற்றையாட்சியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட நிர்வாக கட்டமைப்பாகும் என, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மீளமுடியாத அதிகாரப் பகிர்வைக் கோருவதே தேசியப் பிரச்சினைக்கான தீர்வாகும் எனவும், அதற்கு சமஷ்டி முறையே தீர்வு எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments