பாதுகாப்பு செலவுகளை குறைக்க தொழிற்சங்க பரிந்துரை

0
Ivory Agency Sri Lanka

மக்கள் மீது அதிக வரிச் சுமையை சுமத்தும் அரசாங்கத்திடம், அடுத்த வருடத்திற்கு ஒதுக்கப்படும் பாதுகாப்புச் செலவீனத்தைக் குறைக்குமாறு தொழிலாளர் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட அரசியல் நியமனம் பெற்றவர்களுக்கான கொடுப்பனவுகள் வீண் செலவுகள் என சுட்டிக்காட்டியுள்ள வர்த்தக வலய ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பொன்று அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள வருமான வரியில் திருத்தம் ஒன்றையும் முன்மொழிந்துள்ளது.

“தேவையான செலவுகளுக்கு மாத்திரமே வரி விதிக்கப்பட வேண்டும் – விபரங்களை அறிய மக்களுக்கு உரிமை உண்டு” என ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ள சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம், ஒவ்வொரு அரசும் மக்களிடம் இருந்து நேரடி வரியை விட மறைமுக வரிகளை வீண் செலவுக்காக வசூலிப்பது சாமானிய மக்களின் அனுபவம் எனக் கூறியுள்ளது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவீனமாக ஒதுக்கப்பட்ட 171 பில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக,
அத்தகைய மோதல் அச்சுறுத்தல் இல்லாத நேரத்தில் 2022 ஆம் ஆண்டிற்காக 377 பில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்ட பாதுகாப்பு செலவீனமாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியை கருத்தில் கொண்டு அதனை 200 பில்லியன் ரூபாயாக குறைக்குமாறு தொழிற்சங்கம் கோரியுள்ளது.

சமூகப் பொது நலன்களுக்காக வரி விதிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டும் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ், இவ்வாறு வரி விதிப்பதில் சமூக நீதி இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

” வாழ்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் பெரும்பான்மையான மக்கள் மீது சுமத்தப்படும் மறைமுக மற்றும் நேரடி வரிகளிலிருந்து முடிந்தவரை அவர்களை விடுவித்து, இந்த சமூகத்தின் செல்வத்தையும் வருமானத்தையும் குவிக்கும் மக்கள் தொகையில் 40 சதவீத பணக்காரர்களிடமிருந்து அதிக வரிகளைப் பிரித்தெடுப்பதில் வரிவிதிப்பின் சமூக நீதி உள்ளது.”

அரசாங்கம் முன்வைத்துள்ள முழு வரி அறவீடு முன்மொழிவிலும் அவ்வாறானதொன்றை காண முடியாது எனக் கூறும் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர், 80 வீதத்திற்கும் அதிகமான வரி வருவாயை மறைமுக வரிகள் மூலம் பெற்றுக்கொள்ளும் போது, யாசகர்கள் முதல் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்களே சுமையை ஏறக்குறைய முழுமையாக சுமக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம், வரி விதிப்பு குறித்து பல முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.

அரசாங்க பராமரிப்புக்கான வீண் கொடுப்பனவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகளை இனி வழங்கக்கூடாது எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் உள்ள தலைமைப் பணியாளர்கள் மற்றும் ஜனாதிபதி செயலக பணியாளர்கள், ஊடகப் பணிப்பாளர்கள், அவர்களின் உதவியாளர்கள், பல்வேறு ஆலோசகர்கள், பணிப்பாளர்கள், இணைப்பு அலுவலர்கள் ஆகியோரைப் பராமரிப்பதற்குச் செலவழிக்கும் பணம் வீண் விரயமாகும் என்பதால் இவ்வாறான நியமனங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டுமென அன்டன் மார்கஸ் தொழிற்சங்கத் தலைவர் கோருகின்றார்.

அரசாங்க வைத்திய அதிகாரி ஒருவருக்கு வழங்கப்படும் மிகவும் அநியாயமான மாதாந்த கொடுப்பனவான 50,000 ரூபாய் கொடுப்பனவை இரத்துச் செய்யுமாறும் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம் தனது ஊடக அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் மீதான 15 சதவீத பெறுமதிசேர் வரி, அரசாங்கம் புதிதாக தீர்மானித்துள்ள 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரி ஆகியவற்றை உடனடியாக இரத்து செய்யக் கோரும் சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம், தனிநபர் வருமான வரி அறவிடுவதற்கான குறைந்தபட்ச வரம்பு 02 இலட்சம் ரூபாய் என தீர்மானிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

தனிப்பட்ட பயிற்சி

வருடாந்த வருமானம் 05 மில்லியன் ரூபாய்க்கு மேல் உள்ள அனைவருக்கும் விதிக்கப்படும் தனிநபர் வருமான வரியை 40 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றும் பெரும்பாலான விசேட வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் முறையாக வரி செலுத்தாமையால் பதிவு செய்யப்பட்ட அனைத்து தனியார் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் நோயாளர்களைப் பரிசோதிக்கும் விசேட வைத்தியர்களிடம் இருந்து மாதாந்தம் 10,000 ரூபாய் அரசாங்க வைத்தியசாலை அபிவிருத்தி நிதியாகப் பெற்றுக்கொள்வதற்கும், பதிவு செய்யப்பட்ட அனைத்து சட்டத்தரணிகளிடமிருந்தும், அவர்களை பதிவு செய்வதற்காக வருடாந்தம் 10,000 ரூபாயை அறவிடுவதற்கும் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம் முன்மொழிந்துள்ளது.

“இந்த முன்மொழிவுகள் தேசிய வரிவிதிப்புக் கொள்கையின் அடிப்படை கட்டமைப்பிற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம், மேலும் உள்ளூர் வருமானம் உள்ளிட்ட செலவிடப்படும் வரிப் பணம் உட்பட அரசாங்க செலவினங்களின் ஆவணத்தை சமூகத்தின் முன் உடனடியாக வைக்குமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments