போதைப் பொருட்கள் கடத்தல் குற்றச்சாட்டு: ஆறு சிங்களவர்களுக்கு இந்திய நீதிமன்றம் பிணை மறுப்பு

0
Ivory Agency Sri Lanka

சுமார் 250 கிலோ போதைப் பொருட்கள் கடத்துவதில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் 6 இலங்கை மீனவர்களுக்கு பிணை வழங்க இந்தியாவின் கேரள மாநில உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அவர்கள் இலங்கையர்கள் என்பதால், பிணை வழங்கப்படும் பட்சத்தில் அவர்கள் தலைமறைவாவதற்கு சாத்தியங்கள் உள்ளன, எனவே அவர்களை வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் நிறுத்த முடியாமல் போகலாம் என்பதால் பிணை மறுக்கப்படுவதாக கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதி விஜு ஆபிரஹாம் தனது உத்தரவில் கூறினார்.

தொடுவாவவைச் சேர்ந்த சுனில் குரேரா மற்றும் ரணில் ஜெயந்த ஃபெர்ணாண்டோ, கண்டியைச் சேர்ந்த சாமிக கமகே தேசப்பிரிய மற்றும் புத்தளத்தைச் சேர்ந்த மதுஷ தில்ஷன் ஜெயதிஸ்ஸ, நிபுண் சதருவான் மற்றும் நிலாந்த அருணகுமார ஆகிய ஆறு பேரே போதைப் பொருட்கள் கடத்தியதாக, இந்தியக் கடலோரக் காவற்படையால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி அவர்கள் பயணித்த `ஆகர்ஷ துவா` என்கிற மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சாமிக கமகே தேசப்பிரியவின் இயற்பெயர் தாரக நிஷாந்த ரூபசிங்க என்றும் அவருல்லு போதைப் பொருட்களை கடத்துவதற்காக போலி அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது என்று நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த ஆறு பேரும் சர்வதேச போதைப் பொருட்கள் கடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியாகச் செயல்பட்டனர் என்று நீதிமன்றத்தில் அரச தரப்பில் கூறப்பட்டது. எனினும், அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள், அவர்கள் சாதாரண மீனவர்கள் மட்டுமே, அவர்கள் கைது செய்யப்பட்ட போது போது போதைப் பொருட்கள் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை என்று வாதிட்டனர்.

ஆனால் இந்திய கடலோர காவற்படையின் சார்பில் அரச வழக்கறிஞர் அவர்கள் பயணித்த படகின் ஜி பி எஸ் நிலைப்படங்கள், செய்மதி தொலைபேசி உரையாடல்கள், வங்கி பணபரிமாற்ற ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பித்து அவர்களுக்கும் போதைப் பொருட்கள் கடத்தலிற்கும் தொடர்புண்டு என்று எதிர்வாதம் செய்தனர்.

நீதிபதி விஜு ஆபிரஹாம் தனது உத்தரவில் சுனில் குரேரா இத்தாலியில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார், அவரது 5 பிள்ளைகள் இன்னும் இத்தாலியில் உள்ளனர் என்றும் ஆதரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை அவர்கள் இலங்கையர்கள் என்பதால், விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை மூன்று மாதங்களிற்கும் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

இவர்கள் ஆறு பேரும் விசாரணை நீதிமன்றில் இருமுறை பிணை கோரி விண்ணப்பித்த போது அது நிராகரிக்கப்பட்டத்தால், அதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

Facebook Comments