புனித பாறையை இடிக்க அரசாங்கம் அனுமதி

0
Ivory Agency Sri Lanka

வன்னியில் வாழும் இந்துக்களால் வழிபடப்பட்ட பாறையை இடித்தழிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாறையில் (சிறிய மலை) வெளிநபர் ஒருவருக்கு கருங்கல் அகழ்விற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாறையில் முன்னெடுக்கப்படவுள்ள கருங்கல் அகழ்வை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள், இந்த மலை பல ஆண்டுகளாக மத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தப் பாறையின் உச்சியில் அப்பகுதி மக்கள் ஆதிகாலம் முதலே பிள்ளையாரை வழிபட்டு வருவதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைக்குப் பின்னர் கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பாறையின் உச்சியில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

மக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு வவுனியா பிரதேச செயலாளர் ஞா.கமலதாசன் மற்றும் பிரதேச சபைத் தலைவர் த.யோகராஜா ஆகியோர் மார்ச் 8 ஆம் திகதி அவ்விடத்திற்கான கண்காணிப்பு பயணத்தில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில் பழங்காலத்திலிருந்தே வழிபட்டு வந்த கல் தூண் தற்போது இல்லாமல் போயுள்ளதாகவும், எனினும் அண்மையில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாறை ஒரு வழிபாட்டுத்தலம் என்பதை அறிந்த பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அதிகாரசபையுடன் கலந்துரையாடி இது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பிரதேசவாசிகளுக்கு அறிவிப்பதாக உறுதியளித்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அதிகாரசபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பலவந்தமாக கையகப்படுத்துவதாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments