ஸ்டாலின் கைது ‘ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்’

0
Ivory Agency Sri Lanka

புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சிம்மாசன உரையை ஆற்றி ஜனநாயகத்தை கொண்டு வருவோம் என உறுதியளித்த அதே நாளில் உயர் தொழிற்சங்க தலைவர் கைது செய்யப்பட்டமை ஜனநாயகத்திற்கு கடுமையான அவமானம் என நாட்டின் இடதுசாரி கட்சியொன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

மே 28ஆம் திகதி தலைநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறியதாக குற்றஞ்சாட்டி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை பொலிஸார் ஓகஸ்ட் 3 புதன்கிழமை கைது செய்ததை அடுத்து, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவ சமசமாஜக் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில தொழில்நுட்ப உத்தரவுகளை மீறுவது பொதுப் போராட்டங்களின் போது பொதுவான நிகழ்வுகளாகும் எனவும், எப்போதும் மக்கள் கைது செய்யப்படுவதில்லை எனவும் தெரிவிக்கும் பேராசிரியர் விக்கிரமபாகு கருணாரத்ன பொதுச் செயலாளர் பதவியை வகிக்கும் நவ சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு, அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த கைது வழக்கத்திற்கு மாறானது என வலியுறுத்தியுள்ளது.

“ஆனால், இந்த சம்பவம் நடந்து சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும், இந்த ஆசிரியர் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு அசாதாரண சம்பவம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.”

இதற்கமைய, திட்டமிட்டு காலம் கடந்து கைது செய்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரான கடுமையான அவமானம் எனக் கூறும் நவ சமசமாஜக் கட்சி, ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், போராட்ட உரிமையை மீறும் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஓகஸ்ட் 3ஆம் திகதி புதன்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே, அமைதிப் போராட்டம் மனிதனின் அடிப்படை உரிமை என்றும், அந்த உரிமையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் உறுதியளித்தார்.

“அமைதியான போராளிகளுக்கு எந்தவிதமான பாரபட்சத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன். அமைதியான போராளிகளைப் பாதுகாக்கவும் வாதிடவும் ஒரு விசேட அலுவலகத்தை நிறுவுவேன்.” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வதற்கான அரச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னோடியாக இருந்தவர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments